பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.
சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் B.E., B.Tech., B.Arch., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். மாணவர்கள் http://tneaonline.org என்ற இணையதளத்தில் தங்களது தரவரிசைப் பட்டியலை தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்.
![பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது..! ரேண்டம் எண் இல்லை..!](https://1newsnation.com/wp-content/uploads/2021/06/ponmudi.png)
அதன்படி, 2.10 லட்சம் பொறியியல் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆக.20 முதல் தொடங்குகிறது. வரும் 20 முதல் 23ஆம் தேதி வரை 7.5% இட ஒதுக்கீட்டு பிரிவு, சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. வரும் 25 முதல் அக்டோபர் 21 வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்களின் பெயர்களையும் வெளியிட்டார். 1,58,157 பேருக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
![பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது..! ரேண்டம் எண் இல்லை..!](https://1newsnation.com/wp-content/uploads/2021/12/college-1024x576.jpg)
இந்த ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர கடந்த ஆண்டைக் காட்டிலும் 36,000 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர் என்றும் பொறியியல் படிப்பில் சேருவதற்கான ரேண்டம் எண் இந்தாண்டு இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு பொறியியல் படிப்பு சேர்க்கையில் 2% ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தரவரிசைப் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தாலோ, வேறு குறைகள் இருந்தாலோ, இன்று முதல் வரும் 19ஆம் தேதிக்குள் TNEA Seva Centre-ல் குறைகளை பதிவு செய்யலாம என்றும் தெரிவித்துள்ளார். குறைகள் நியாயமாக இருப்பின், உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என்றும் 18004250110 என்ற எண்ணுக்கு அழைத்து குறைகளை தெரிவிக்கலாம் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்காத அரசுப்பள்ளி மாணவர்கள் வரும் 19ஆம் தேதிக்குள் தங்கள் பெயரை இணைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.