தஞ்சாவூர் கீழவாசல் பூமால் ராவுத்தர் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். தட்டு வண்டி இழுக்கும் கூலித் தொழிலாளி. இவரது மகன் நந்தகுமார்(22). எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அலுமினிய தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த இவர் தனக்கு அதிநவீன கேடிஎம் ரக பைக் வேண்டுமென தனது பெற்றோரிடம் கேட்டுள்ளார், மேலும் அதற்கான கொட்டேஷனும் வாங்கியுள்ளார். அந்த அதிநவீன பைக்கின் விலை ரூ.1.5 லட்சத்துக்கு மேல் என்பதால், அவ்வளவு விலை கொடுத்து வாங்கி தர முடியாததால், காலதாமதம் செய்து வந்துள்ளார் அவரது தந்தை.
இதனால் விரக்தியடைந்த நந்தகுமார் டிசம்பர் 27-ம் தேதி கல்லணை கால்வாய் நடைபாதையில் எலி பேஸ்ட்டை மில்க் ஷேக்-ல் கலந்து குடித்துள்ளார். மேலும் இதை தனது மொபைலில் வீடியோ பதிவு செய்து அதை நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள், அவர் இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்று நந்தகுமாரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக அனுமதிக்கபட்டிருந்த நந்தகுமார் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். தான் விரும்பிய விலையுயர்ந்த பைக்கை தனது ஏழை பெற்றோர் வாங்கித் தரவில்லை என்ற விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.