தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், ரேஷன் அரிசி கடத்தல் விஸ்வரூபமெடுத்துள்ளது. எனவேதான், ரேஷன் பொருள் பதுக்குதல் குறித்து, இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அதேபோல, குடிமைப் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் பறக்கும்படை அதிகாரிகள் அவ்வப்போது சோதனைகள் நடத்தி வருகின்றன.
இதனிடையே, பொதுமக்களின் குறைகள் தீர்க்க மற்றுமொரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. ரேஷன் அட்டைதார்கள், https://tnpds.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று உரிய விவரங்களை அளித்து கட்டணம் செலுத்தி, குடும்ப அட்டைகளை பெற முடியும். இதையடுத்து, குடும்ப அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ள மக்கள் குறைதீர் முகாம்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை மண்டலத்தில், இன்றைய தினம் குறைதீர் முகாம் நடைபெற்றது. உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் இதற்கான அறிவிப்பினை ஏற்கனவே வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ஜுன் 2023 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் வரும் இன்று காலை முதல் மதியம் வரை நடைபெற்றது. நியாய விலைக் கடைகளில் பொருட்களை பெற நேரில் வருகை தர முடியாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்ததால், சென்னையிலுள்ள ரேஷன் அட்டைதாரர்கள் இந்த முகாமை சரியாக பயன்படுத்தி கொண்டனர்.
முகாமில் தெரிவிக்கப்பட்ட குறைகள், விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது சென்னை மாவட்டத்தில் குறைதீர் முகாம் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த சேவை அடுத்தடுத்து அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக நடத்தப்படும் என்றும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அந்தந்த மாவட்ட மக்கள் பலன்பெறுவார்கள் என்றும் நம்பப்படுகிறது.