கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் டி.கே.சிவகுமார் அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்துக் கட்சியைச் சேர்ந்த தேசிய மற்றும் மாநில தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்கனவே ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு மாதந்தோறும் ஊக்கத் தொகையாக 2,000 ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.சிவகுமார். “காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்த பிறகு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு அன்ன பாக்யா என்ற திட்டத்தின் பெயரில் ஒவ்வொரு மாதமும் 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும். காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து அளிக்கப்படும் தேர்தல் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது” என்றார்.