தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. இதில் அம்மாவட்ட தலைவர் மாயவன், செயலாளர் பெருமாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், மாநில அரசு பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் சிவக்குமார், மாநில அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஜெயச்சந்திரராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
அப்போது, பொது விநியோகத் திட்டத்திற்கென தனித்துறையை உருவாக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நாளை மறுநாள்(புதன்கிழமை) முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் 3 துறைகள் சம்பந்தப்பட்டிருப்பதால் 3 துறையை சேர்ந்த அதிகாரிகள் 20 பேர் ஆய்வு என்ற பெயரில் பணியாளர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே பொதுவிநியோக திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க வேண்டும். எங்களது 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற உள்ளதாக” அறிவித்தார்.