பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் (Paytm) செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் எல்லா இடங்களிலும் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரித்துவிட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஏராளமானோர் பயன்படுத்தும் செயலியாக கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் உள்ளது. இந்நிலையில், பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை தொடர்ந்து மீறி வருவதாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் செயல்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 29ஆம் தேதி முதல் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் செயல்பாடு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு, புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொள்ள பேடிஎம் பேமெண்ட் பேங்க் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் தணிக்கையாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், தொடர் விதிமீறலில் பேடிஎம் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, பேடிஎம் மீது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பேடிஎம்-ல் பணத்தை புதிதாக டெபாசிட் செய்யவும், பண பரிமாற்றம் செய்யவும் உதவும் பேமெண்ட்ஸ் பேங்க் செயல்பாடு நிறுத்தப்படுகிறது. ஃபாஸ்டேக், ப்ரீபெய்டு வசதிகளை வழங்கவும் பேடிஎம் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பேடிஎம் வாலட்களில் ஏற்கனவே உள்ள தொகையை பயன்படுத்த தடை இல்லை. அதேபோல, பேடிஎம் யுபிஐ சேவைகளை பயன்படுத்தவும் தடை இல்லை. யுபிஐ மூலம் பணப் பரிமாற்றம் செய்வதற்கு தொடர்ந்து பேடிஎம் செயலியை பயன்படுத்தலாம்.