மருதாணி இலைகள் அழகுக்காக மட்டுமே அல்லாமல், உடல்நலம் காக்கும் மருத்துவப் பொருளாகவும் பயன்படுகின்றன. அந்தவகையில் இதில் அடங்கியுள்ள உடல் ஆரோக்கிய மருத்துவ பயன்களை தெரிந்துகொள்வோம்.
மருதாணி இலையை வெறும் அழகுக்காக மட்டும் பெண்கள் கைககளில் வைக்கிறார்கள் என்று கருதினால் அது மிகப்பெரிய தவறாகும். மருதாணி இலை கிருமி நாசினி.கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்கவல்லது. மருதாணி இலை, மருதாணி பூ, மருதாணி விதை, மருதாணி வேர் என எல்லாமே மருத்துவ குணங்களை கொண்டவை.
மருதானியின் பூக்களைப் பறித்து உலர்த்தி தலையணைகளில் பரப்பி வந்தால் ஆழ்ந்த தூக்கம் வரும். மருதாணி இலையை மருதாணி பூக்களையும், இளந்தளிர்களையும் பறித்து சாறு பிழிந்து அரைத் தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தொழுநோய், மேக நோய் இரண்டும் மேலும் பரவாமல் தடுக்கும்.
இந்த இலைகளை நீரில் ஊற வைத்து, வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு, தொண்டைக் கம்மல் குணமாகும். மருதாணி இலையை நன்றாக அரைத்து சிறு சிறு அடைகளாகத் தட்டி நிழலில் உலர்த்தி தேங்காய் எண்ணெயில் சில நாள்கள் ஊறவிட்டு, அதை நன்றாகக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்தால் நீண்ட அடர்த்தியான தலைமுடி வளரும். மருதாணி இலை உடம்பிலுள்ள அதிக உஷ்ணத்தைக் குறைத்து, கண்களுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் ஆகியவை குணமாக, மருதாணி இலையை அரைத்தநெல்லிக்காய் அளவு பசும்பாலில் கலந்து இருவேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட்டால் விரைவில் குணமாகும். அக்னி நக்ஷத்திர வெயிலில் உடல் சூடு காரணமாக பல தோல் நோய்கள் வரும் நிலையில் பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் மருதாணியை கைகளிலும் உள்ளங்காலிலும் பயன்படுத்தினால் உடலின் சூடு தனிந்து வெம்மை நோயிலிருந்து விடுபடலாம்.
மருதாணி பூவின் மூலம் தயாரிக்கப்படும் தைலத்திலும் ஏராளமான நன்மைகள் உள்ளன. மருதாணி பூக்கள் தைலம் தயாரிக்கும் முறை மற்றும் அதன் பயன்கள் குறித்து பார்க்கலாம். நல்லெண்ணெய் – 100 கிராம், தேங்காயெண்ணெய் – 150 கிராம், மருதாணி பூ – 100 கிராம் எடுத்துக்கொள்ளவும். மருதாணி பூக்களை எடுத்து வந்து நிழலில் இரண்டு நாட்கள் வரை காயவிடவும். நல்லெண்ணெய், தேங்காயெண்ணெய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து காய்ச்சி எடுக்கவும். மிதமான சூட்டில் இருக்கும் போது மருதாணி பூவை சேர்க்கவும். மருதாணி பூ நன்றாக எண்ணெயோடு கலக்க வேண்டும்.மூன்று நாட்கள் வைத்து எடுத்தால் எண்ணெய் நிறம் மாறி இருக்கும். மருதாணி வாசனையோடு தைலப்பதத்தில் கிடைக்கும் இதை சிறிய கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்து ஒருவருடம் வரை பயன்படுத்தலாம்
பாதங்களில் சேற்றுப்புண், பாதவெடிப்பு, கால்விரல் சொத்தை போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாகவும் இந்த தைலம் இருக்கும். தொப்புளில் எண்ணெய் வைத்து வட்ட வடிவில் மசாஜ் செய்தால் வயிற்றுக்கோளாறுகள் குறிப்பாக உஷ்ணம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.2 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இதை பயன்படுத்தலாம்.அடிக்கடி வாய்ப்புண் பிரச்சனையை கொண்டிருப்பவர்கள் இந்த தைலத்தை உதட்டில் தடவி வந்தால் வாய்ப்புண் குணமாகும். வாய்ப்புண் ஆறும் வரை இந்த தைலத்தை தடவி வரலாம். மன அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள் இந்த தைலத்தை பயன்படுத்துவதன் மூலம் அழுத்தத்தை குறைக்கலாம். தூக்கமின்மை பிரச்சனை கொண்டிருப்பவர்கள் மருதாணி பூ தைலத்தை கால்களில் தடவினால் மன அழுத்தம் குறையும்.