தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், ஆறு ஆண்டுகள் வரை பதவியில் இருக்க முடியும் என்பதை, ஐந்து ஆண்டுகளாக மாற்றும் சட்ட மசோதா, நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. மாநில தேர்தல் ஆணையரின் பதவி காலம், தற்போது இரண்டு ஆண்டுகளாக உள்ளது. மேலும் இரண்டு தொடர்ச்சியான கால அளவுகளுக்கு, அவர் மீண்டும் நியமிக்கப்படுவதற்கு தகுதி உடையவர். மொத்தத்தில், ஆறு ஆண்டுகளுக்கு பதவி வகிக்கலாம். அவரது பதவி காலத்தின் போது, 65 வயதை நிறைவு செய்தால், அவர் ஓய்வு பெற வேண்டும்.
ஆனால், பெரும்பாலான மாநில தேர்தல் ஆணையர்களின் பதவி காலம், ஐந்து ஆண்டுகள் அல்லது, 65 வயது வரை என உள்ளது. எனவே, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், தான் பதவியேற்ற நாளில் இருந்து, ஐந்து ஆண்டுகள் அல்லது 65 வயது எட்டும் வரை, இவற்றில் எது முந்தையதோ, அதுவரை பதவியில் இருக்க வேண்டும். அவர் மறு பணியமர்த்தலுக்கு தகுதியுடையவர் ஆக மாட்டார் என, 1994ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்து, நேற்று சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதேபோல, நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட ஊராட்சிகளில் வீட்டு வரி என்பதை சொத்து வரி எனப் பெயர் மாற்றம் செய்யும் மசோதா, ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டத்தை ரத்து செய்யும் மசோதா உள்ளிட்டவையும் நிறைவேற்றப்பட்டன.