தக்காளி விற்றதன் மூலம் லட்சாதிபதியான இளம் விவசாயி ஒருவர், தன்னை நிராகரித்த பெண் வீட்டாரை மூக்கில் விரல் வைக்கச் செய்திருக்கிறார்.
சந்திரயானுக்கு போட்டியாய் விண்ணில் பாயும் தக்காளி விலையால் சாமானியர்கள் படும் அவதி சொல்லி மாளாது. ஆனால், இதன் மறுபக்கத்தில் தக்காளி, தன்னை விளைவித்த விவசாயிகளை கோடீஸ்வரர்களாக்கி வருகிறது. அதில், திரைப்படம் போல சுவாரசியமான கதைகளும் உண்டு. அவற்றில் ஒன்று கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் அரங்கேறியிருக்கிறது.
சாம்ராஜ்நகரின் லக்ஷ்மிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளம் விவசாயி ராஜேஷ். இவர், படிப்பை முடித்ததும் நகரங்களுக்கு நகராமல் வைராக்கியத்துடன் விவசாயத்தில் இறங்கினார். அவர் நம்பிய விவசாயம் அவரைக் கைவிடவில்லை. தன் வயதொத்த நகரத்து இளைஞர்களுக்கு இணையாக வருமானத்தையும் ஈட்டத் தொடங்கினார். ஆனால் திருமண சந்தையில், நகரங்களில் பணியாற்றும் ராஜேஷின் நண்பர்களுக்கு தகைந்தது போல மணப்பெண் எதுவும் அவருக்கு தகைந்தபாடில்லை.
அண்மையில் கூட, ராஜேஷ் வெகுவாய் விரும்பிய பெண் ஒருவரை வீடு தேடி முறைப்படி பெண் கேட்டுள்ளார். ’அரசு ஊழியருக்குத் தான் பெண் கொடுப்போம்… விவசாயியை எல்லாம் நம்பி பெண் தர முடியாது’ என விரட்டியடிக்காத குறையாக மறுத்து விட்டார்கள். வெறுத்துப் போன ராஜேஷ், அதன் பிறகு பெண் பார்க்கும் சடங்கை நிறுத்தி விட்டார். தான் நம்பிய விவசாயத்தின் மூலமாக பெரும் தனவந்தராக தன்னை நிலைநிறுத்திய பிறகே, திருமண ஏற்பாடு என சபதம் எடுத்தார்.
அதன்படி, தனது 12 ஏக்கர் வயலில் தக்காளி நடவு செய்தார். அவை மகசூல் காணத் தொடங்கிய போது, தக்காளி விலை ஏற்றம் கண்டதில் தற்போது வருமானம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது. இப்படி அண்மை விற்பனையில் மட்டும் ரூ.40 லட்சத்தை குவித்திருக்கிறார் ராஜேஷ். தக்காளி விலை இப்படியே தொடர்ந்தால் விரைவில் கோடீஸ்வரனாகி விடுவேன் என்கிறார். கையில் லகரங்கள் புரள ஆரம்பித்ததும் முதல் வேலையாக புத்தம்புது ’மஹிந்திரா எக்ஸ்யுவி 700’ கார் ஒன்றினை வாங்கிவிட்டார்.
”எனது சபதம் நிறைவேறி விட்டது. இனி இந்த சொகுசு காரில் சென்று பெண் பார்க்கப் போகிறேன். யார் மறுப்பார்கள் என பார்த்து விடுகிறேன்..” என்கிறார் கெத்தாக. தக்காளி விலை உயர்வு குறித்து புலம்புவோர், அதன் மறுபக்கத்தில் ராஜேஷ் போன்ற விவசாயிகள் வாழ்வு பெறுவதையும் அறிந்து ஆறுதல் பெறலாம்.