சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் 66 வயதான சோழன். இவருக்கு 60 வயதான வனஜா என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 3 பிள்ளைகளுக்கும் திருமணமான நிலையில், சோழன், வனஜா மட்டும் தனியாக இந்த வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாலை 3 மணி அளவில் முகமூடி அணிந்த 5 பேர் வீட்டிற்க்குள் நுழைந்துள்ளனர். மேலும், வீட்டில் இருந்த சோழன், வனஜா இருவரின் கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு, வீட்டில் இருந்த 70 பவுன் நகை, ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வில்லிவாக்கம் குற்றப்பிரிவு போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், கொள்ளை சம்பவம் தொடர்பாக கொரட்டூர் கிரிஜா நகரை சேர்ந்த ராதா(47), வில்லிவாக்கம் சிட்கோ நகர் 2-வது தெருவைச் சேர்ந்த ராமர்(52) மற்றும் சென்னை அண்ணாநகர் மேற்கு முகப்பேரை சேர்ந்த முகமது பக்ரூதீன்(42) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
கைதான ராதாவும், ராமரும் சோழனின் நெருங்கிய உறவினர்கள்.
சோழன் வீட்டில் அதிகளவில் பணப்புழக்கம் இருப்பதை அறிந்த இவர்கள், வயதான காலத்தில் தனியாக வசிக்கும் சோழன் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக ராதா, தான் வேலை செய்து வந்த தையல்கடைக்காரர் முகமது பக்ரூதீன் உள்பட மேலும் சிலருடன் சேர்ந்து கொள்ளையடித்தது விசாரணையில் தெரிந்தது. உறவுக்காரனே இப்படி ஒரு சம்பவத்தை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.