தேனி மாவட்டம் பூதிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காமேஸ்வரன். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்து கல்லூரி செல்வதற்காக அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்திருக்கிறார். காமேஸ்வரனின் தந்தை திருப்பூரில் தங்கியிருந்து வேலை செய்கிறார். இதனால் தாயுடன் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். பைக்கில் வெளியே சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்ற காமேஸ்வரன், மீண்டும் வீடு திரும்பாததால் மகனை பல இடங்களில் தேடிப் பார்த்துவிட்டு எங்கும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காமேஸ்வரனை தேடி வந்த நிலையில், வீர சின்னம்மாள் கிராமத்தில் கர்ணன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருக்கும் பாலடைந்த கிணற்றின் அருகே பைக்கு ஒன்று 2 நாட்களாக நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. உடனே போலீசார் அந்த இடத்திற்கு சென்று கிணற்றின் அருகில் கிடந்த வாகனத்தை சோதனை நடத்தியுள்ளனர். அந்த வாகனத்தின் அருகே சிறுவன் ஒருவன் கழுத்தறுக்கப்பட்டு தலை திருகிய நிலையில் சடலமாக கிடந்திருப்பதை பார்த்திருக்கின்றனர். உடனே காணாமல் போய்விட்டதாக புகார் அளித்திருந்த காமேஸ்வரனின் உறவினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். காமேஸ்வரனின் தாய் மாமன் சம்பவ இடத்திற்கு ஓடிவந்து பார்த்தபோது, அது காமேஸ்வரன் தான் என்பதை அறிந்து கதறி அழுதிருக்கிறார் .
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், காமேஸ்வரன் 12ஆம் வகுப்பு வந்த போது அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மாணவியின் தரப்பினர் இந்த காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாணவியின் தரப்பினர் காமேஸ்வரனின் வீட்டிற்கு சென்று 3 முறை சத்தம் போட்டு கண்டித்து விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் தான் தங்கள் மகனை மாணவியின் உறவினர்கள் தான் கொலை செய்து விட்டார்கள் என்று காமேஸ்வரனின் தாய் புகார் அளித்துள்ளார். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நிலையில், மாணவியின் உறவினர்கள் தலைமறைவாக இருக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் தான் மாணவனை கொலை செய்தது உறுதியாகி இருக்கிறது. இதன் பின்னர் மாணவியின் பெற்றோர் சகோதரனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், அவர்களோ காமேஸ்வரன் கொலைக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்திருக்கிறார்கள். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.