இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாவட்டத்தில் உள்ள சாலையோர உணவு வணிகர்கள், தள்ளுவண்டி கடைகளுக்கு கட்டாயம் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கடைகளில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். தரமான குடிநீர் வழங்கப்பட வேண்டும். இரவு நேரம் மட்டும் செயல்படும் உணவு கடைகள், சில்லி கடைகள், பாஸ்ட்ஃ புட் கடைகளில் செயற்கை நிறமிகள் மற்றும் அஜினமோட்டோ பயன்படுத்தக் கூடாது, ஈக்கள் மற்றும் துசுக்கள் புகாதவாறு உணவு தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும்மீண்டும் மறுசுழற்சிக்கு பயன்படுத்தாமல் RUCO-திட்டத்தின் கீழ் பயோ டீசல்தயாரிக்க வழங்க வேண்டும்.
பெட்டி கடைகள், டீ கடைகள், உணவு விடுதிகளில், வீடுகளில் கூட வடை, பஜ்ஜி, போண்டா, பக்கோடா, இறைச்சி, மீன்கள் போன்ற உணவை, அச்சிடப்பட்ட காகிதங்களில் வைத்து எண்ணெய் பிழிவது போன்ற செயலானது சிறிது சிறிதாக விஷத்தை உண்பதற்கு சமமாகும். அச்சிடப்பட்ட காகிதங்களில் உள்ள மையில் உள்ள கனிம வேதி பொருள்களான அரைல் அமீன்கள் நுரையீரல் மற்றும் சிறுநீர் பை கேன்சரை உருவாக்கும். வண்ணங்கள், தடிமனான எழுத்துக்கள் உருவாக்க மற்றும் விரைவாக உலர்த்த பெட்ரோலிய மினரல் ஆயில், மெத்தனால், பென்ஸீன்,
டொலியீன், கோபால்ட் போன்ற வேதி பொருட்கள் செய்தி அச்சு பதிக்க
பயன்படுத்தப்படுகிறது.

தீங்கு விளைவிக்கக்கூடிய தாலேட் போன்ற பொருட்களை உணவுடன் பயன்படுத்துவதால் வயதானவர்கள், குழந்தைகள், வளரின பருவத்தினர் நோய் எதிர்ப்பு சக்தி இழந்து கேன்சர் போன்ற நோய்கள் வர காரணமாகின்றன. மேலும், அஜீரண கோளாறை உருவாக்குவதோடு கடுமையான விஷத்தன்மையையும் ஏற்படுத்துகிறது.
ஆகையால் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தால் அச்சிடப்பட்ட காகிதங்கள் மற்றும் நெகிழிகள் போன்றவற்றால் உணவை பேக்கிங் செய்வதோ, அச்சிடப்பட்ட காகிதங்களில், எண்ணெய் பிழியவோ, வைத்து உண்ண பயன்படுத்தவோ கூடாது. எனவே டீ கடைகள், உணவகங்கள், சிற்றுண்டி விடுதிகள், பேருந்து நிலையங்கள், எண்ணெய் பலகாரக் கடைகள் மற்றும் அனைத்து உணவுபொருள் விற்பனை நிறுவனங்களில், அச்சிடப்பட்ட காகிதங்கள் (செய்திதாள்.மையினால் எழுதிய வெள்ளை காகிதம், பழுப்பு காகிதம்) மற்றும் அது தொடர்பான பொருட்களைக் கொண்டு பேக்கிங் செய்யவோ, உண்பதற்கு வழங்கவோ கூடாது. அவ்வாறு வழங்கப்படும் உணவுப் பொருட்களை பொதுமக்கள் உட்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. சூடான உணவு பொருளை பிளாஸ்டிக் பைகளில் பேக் செய்யப்படக் கூடாது மற்றும் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பயன்படுத்தக் கூடாது.