சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக 6 மாத கால சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர், ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். அப்போது அவர் முன்வைத்த வாதத்தில், “இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்நீதிமன்ற கிளையின் வரம்பிற்கு உட்பட்டதல்ல. ஆகவே, இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரிக்க இயலாது. நீதித்துறையில் இடஒதுக்கீடு என்பது முறையாக பின்பற்றப்படவில்லை. பிராமணர்கள் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 3% இருந்தாலும், நீதித்துறையில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆனால், பெருமளவில் பட்டியல் இனத்தவர்கள் இருந்தாலும், நீதித்துறையில் அவர்களின் பங்கு மிகக்குறைவாகவே உள்ளது.

அருந்ததியர் இனத்தில் ஒரு நீதிபதி கூட இல்லை. இதனால், பட்டியலின நீதிபதிகள் வழக்குகளைக் கையாள்கையில், அவர்களின் முழு பங்கையும் அளிக்க இயலவில்லை. பிற நீதிபதிகளின் விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதுதொடர்பாக பல நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அமைப்புகள் அளித்த தரவுகளைக் குறிப்பிட்டே இந்த கருத்தை பதிவு செய்துள்ளேன். எனது சில கருத்துக்களை தனியே பார்க்கும்போது அது மிகுந்த பிரச்சனையை ஏற்படுத்தும் வகையிலானதாகத் தோன்றலாம். ஆனால், அதன் பின்புலத்தோடு உண்மை விளங்கும். நீதித்துறையின் மதிப்பை குறைப்பதோ, களங்கப்படுத்துவதோ எனது நோக்கம் அல்ல. நீதிமன்ற உத்தரவுகளை விமர்சிக்க உரிமை உண்டு. பேச்சுரிமை அதற்கான உரிமையை வழங்குகிறது” என தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கில் உத்தரவு பிறப்பிப்பதற்காக சிறிது நேரம் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு சவுக்கு சங்கருக்கு 6 மாத கால சிறை தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பித்தனர். மேலும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில், வெளியிட்ட பதிவுகளையும் நீக்க சவுக்கு சங்கருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.