Manipur: கடந்த 2023ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி பழங்குடியின மக்கள் இடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 250க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் அடித்துக் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். பலர் வீடுகளை இழந்து அகதிகளாக மாறினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டும் பணி தீவிரப்படுத்தப்படது. இதனிடையே, மாநிலத்தை ஆளும் பாஜக தலைமையிலான அரசின் மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து முதலமைச்சர் பதவியை பிரேன் சிங் ராஜினாமா செய்தார். அடுத்த முதலமைச்சர் தேர்வு செய்வதில் கடும் இழுபறி நீடித்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ஏறத்தாழ 22 மாதங்களுக்கு பின் மணிப்பூரில் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டது. தலைநகர் இம்பாலில் இருந்து சேனாபதி மாவட்டத்திற்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டது. காங் போக்பி வழியே சென்ற பேருந்தை சிலர் மறித்து அடித்து நொறுக்கினர். பேருந்தின் மீது கற்களை வீசி வன்முறையாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த மோதல்களில் ஒரு போராட்டக்காரர் ஒருவர் கொல்லப்பட்டார், பெண்கள் உட்பட 25 பேர் காயமடைந்தனர். இறந்தவர் லால்கௌதாங் சிங்சிட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கீதெல்மன்பியில் நடந்த மோதல்களின் போது 30 வயதான சிங்சிட் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போது இறந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Readmore: ஆசிய கபடி சாம்பியன்ஷிப்!. 5வது முறையாக கோப்பையை வென்றது இந்திய பெண்கள் அணி!. ஈரானை வீழ்த்தி அபாரம்!