யானைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் வகையில் கேரளாவில் உள்ள கோவிலுக்கு ரோபோ யானை ஒன்றை பீட்டா அமைப்பு பரிசளித்துள்ளது.
கோயில் திருவிழாக்களுக்கு பாகன்களால் சிறைபிடிக்கப்பட்ட யானைகளை வேலைக்கு அமர்த்தும் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரிஞ்சாடப்பள்ளி ஸ்ரீ கிருஷ்ணா கோவிலுக்கு, பீட்டா அமைப்பு சார்பில் ரோபோ யானை வழங்கப்பட்டது. திரைப்பட நடிகை பார்வதி திருவோத்து PETA உடன் இணைந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரோபோ யானையை வழங்கினார்.
‘யானைக்கு’ ‘இரிஞ்சாடப்பிள்ளி ராமன்’ என்று பெயர் சூட்டப்பட்டது. 800 கிலோ எடை கொண்ட இந்த யானை ரப்பர் கோட்டிங் மற்றும் அயன் பிரேம் கொண்டு அச்சு அசலாக பார்ப்பதற்கு நிஜ யானை போலவே இருக்கின்றது என்பதும் காதுகளை ஆட்டிய வண்ணம் இருக்கும் இந்த யானை மின்சாரத்தால் இயக்கப்படுவதாகவும் பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த யானை மீது நான்கு பேர் உள்ளாரை அமர்ந்து கொள்ளலாம் என்றும் இந்த யானையால் எந்தவித பாதிப்பும் இருக்காது என்று கூறப்படுகிறது. இந்த யானையை செய்வதற்கு 5 லட்ச ரூபாய் செலவாகி உள்ளது என்றும் இந்த யானையை அனைத்து கோவில்களிலும் பயன்படுத்துவதன் மூலம் நிஜ யானை துன்புறுத்தப்படுவது தடுக்கப்படும் என்றும் பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது.
யானைகள் என்பது ஒரு சமூக வாழ் உயிரினம் என்றும் அது தங்கள் குடும்பத்தோடு காடுகளில் வாழ வேண்டிய விலங்கினம் என்றும் அந்த யானையை மனிதர்கள் கோவில் விசேஷங்களுக்காக ஆண்டு கணக்கில் கட்டி வைத்து துன்புறுத்துவதை ஏற்க முடியாது என்றும் அதற்காகத்தான் இந்த புதிய ரோபோ யானையை உருவாக்கியுள்ளோம் என்றும் பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஏற்பாடுகளுக்கு நடிகை பார்வதி உள்பட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.