பெரம்பலூர் மாவட்டம், உசேன் நகரம் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் 33 வயதான சந்தோஷ்குமார். பிரபல ரவுடியான இவருக்கு, 26 வயதான ராதிகா என்ற மனைவியும், 6 வயதான பவித்ரா என்ற மகளும், 4 வயதான விஷ்வா என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 6 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குழந்தைகள் இருவரும் சந்தோஷ்குமார் பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 5-ந் தேதி தனது மனைவியை வீட்டிற்க்கு அழைக்க அவருக்கு வீடியோ காலில் பேசியுள்ளார்.
அப்போது அவர் தனது மகன் விஷ்வாவை கொலை செய்து விடுவதாக ராதிகாவை மிரட்டியுள்ளார். இது தொடர்பான 2 வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராதிகா, இது குறித்து குன்னம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சந்தோஷ்குமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தந்தையே தனது மகனை கொலை செய்து விடுவதாக மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.