ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நேற்றைய போட்டியில் லக்னோ அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற ஆர்ஆர் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் ஆடிய லக்னோ அணிக்கு கேஎல் ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து கைல் மேயர்ஸ் 51 ரன்கள் எடுத்த நிலையில், வெளியேறினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த எளிய இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்கள் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். இதில், யஸஷ்வி ஜெய்ஸ்வால் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் ரன் அவுட்டில் வெளியேறினார். அதன் பிறகு ஜோஸ் பட்லர் 40 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு வந்த மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டை இழக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றி வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக கை நழுவிப் போனது. இறுதியாக கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2 விக்கெட் அடுத்தடுத்து விழ, 8 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.
இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில் திருப்பு முனையை ஏற்படுத்தியது சஞ்சு சாம்சனின் ரன் அவுட், ஷிம்ரன் ஹெட்மையர் விக்கெட் மற்றும் துருவ் ஜூரெலின் கடைசி விக்கெட் ஆகியவை திருப்பு முனையாக அமைந்துவிட்டது. ஜூரெலின் கடைசி ஓவரில் சிக்ஸர் அடிக்க முயற்சிக்க தீபக் கூடா கச்சிதமாக அவரது கேட்சை பிடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதுவரையில் நடந்த 2 போட்டிகளில் ராஜஸ்தான் மட்டுமே போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், முதல் முறையாக ராஜஸ்தானுக்கு எதிராக தனது முதல் வெற்றியை லக்னோ பதிவு செய்துள்ளது.
அதுமட்டுமின்றி ஜெய்பூரில் நடந்த 7 போட்டிகளில் இரண்டாவது பேட்டிங் செய்த அணி தான் 6 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. முதல் முறையாக 7ஆவது போட்டியில் முதலில் ஆடிய அணி ஜெய்ப்பூரில் தனது வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. இதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி கண்டு புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.