பனை மரம் ஏறும் வகையில் சிறந்த இயந்திரத்தை தயாரித்து தருவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு தொட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தின் மாநில மரமாக விளங்கிவரும் பனை மரத்தின் சாகுபடி மற்றும், பனை மரங்களை நம்பி வாழும் வேளாண் பெருமக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கு, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், நடப்பு 2022-23 ஆம் ஆண்டிலும், பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் மூலம் 10 இலட்சம் பனை விதைகளை விநியோகம் செய்வதற்கும், பனையேறும் சிறந்த இயந்திரத்தை கண்டுபிடிப்பவருக்கு விருதளிப்பதற்கும், 50 சதவிகித மானியத்தில் பனை பொருட்கள் தயாரிக்கும் கூடம், பனை பொருட்கள் தயாரிப்பதற்கான உபகரணங்கள் மற்றும் பனை ஏறும் விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியத்தில் கருவிகள் வழங்குவதற்கும் தமிழ்நாடு பனைபொருள் வளர்ச்சி வாரியத்தின் மூலம் தரமான பனை வெல்லம், பனங்கற்கண்டு தயாரிப்பதற்கு பயிற்சி வழங்கும் வகையில் ரூ.2.02 கோடி நிதியினை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தநிலையில், பனை மரம் ஏறும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில், எளிதில் பனை ஏறும் வகையில் சிறந்த இயந்திரத்தை தயாரித்து தருவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு தொட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அறிவித்துள்ளது.
இதில், பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள், முன்னோடி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களும் கலந்து கொள்ளலாம் என்று கூறியுள்ள தமிழக அரசு, www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த இயந்திரத்தை தயாரித்து தருபவருக்கு ஆகும் மொத்த செலவு, கருவியின் செயல்திறன், இதற்கான விலையின் உண்மைத்தன்மை, இயந்திரத்தின் ஒட்டுமொத்த பயன்பாட்டுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையிலே விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கோவையை சேர்ந்த பட்டதாரி இளைஞர், பனை மரம் ஏறுவதற்கு துணையாக கருவி ஒன்றை கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது