மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த உரிமைத் தொகை அனைவருக்குமே கிடைத்துவிடாது. தகுதியானவர்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும். ’இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களை கொண்டு உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், தற்போது மக்களிடம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டு சுமார் 80 லட்சத்திற்கும் அதிகமான படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தற்போது ஏற்கனவே பெறப்பட்ட படிவங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, இத்திட்டத்தின் கீழ் பணம் பெறுவது தொடர்பாக பெண்களுக்கு ஏராளமான சந்தேகங்கள் உள்ளன. அதாவது, இந்த முகாம்களை தவறவிட்டால் என்ன செய்வது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை செயலர் தாரேஷ் அகமது, தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதாவது, “2 கட்ட முகாம்களையும் தவறவிட்டவர்கள் ஆகஸ்ட் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். அதேபோல, விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சில இடங்களில் கள ஆய்வும் நடத்தப்படும். ஆய்வுக்கு வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து ஒத்துழைப்பு தர வேண்டும். நீங்கள் அளிக்கும் தகவல்கள் போலியானதாக இருக்கும்பட்சத்தில் அது கண்டுபிடிக்கப்பட்டால் விண்ணப்பதாரர் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்” என தெரிவித்துள்ளார்.