கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மகளிருக்கு திட்டத்தின் தொடக்க நாளாக கடந்த 15ஆம் தேதி அவர்களின் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. சில மகளிரின் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்கப்படாததால் தொகை வரவு வைக்க இயலாத நிலை உள்ளது. இதனை சரி செய்து அவர்களின் வங்கி கணக்குகளுக்கும் விரைவில் உரிமைத்தொகை வரவு வைக்க அரசால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதில் தகுதியானவர்கள் எவரும் தேர்வு செய்யப்படவில்லை என கருதினால், விண்ணப்பம் ஏற்கவில்லை என்ற குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக மட்டுமே மேல் முறையீடு செய்ய வேண்டும். இதற்காக கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. மேல்முறையீடு அலுவலரான வருவாய் கோட்டாட்சியரால் மேல்முறையீடுகள் பெறப்பட்ட 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.
இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்ட பெண்கள் கோட்டாட்சியர்களிடம் மேல்முறையீடு செய்கின்றனர். அதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு முகாம்களிலும் அரசின் பொது சேவை மையங்கள் வழியாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அங்கு பெண்கள் மரியாதைக்குறைவாக நடத்தப்படுவதுடன், தொழில்நுட்பக் குறைபாடு உள்ளிட்ட காரணங்களை காட்டி அலைக்கழிப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.