உயர்கல்வி உதவித்தொகை பெற இதுவரை 3 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக சமூக நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியை தொடர வேண்டும் என்பதற்காக மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் உதவி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஏழை மாணவிகள் பள்ளியோடு படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற இணையதளம் வழியாக கடந்த 15ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுவரை 3 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக சமூக நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் உதவித்தொகை வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும், கிராமப்புற மாணவிகளுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிப்பதில் சிரமம் இருப்பது தெரியவந்தது. பலர் விண்ணப்பத்தில் முழு விவரங்களை தெரிவிக்கவில்லை. சிலர் 2-க்கும் மேற்பட்ட கல்லூரிகளை குறிப்பிட்டுள்ளனர். இது போன்ற குழப்பங்களை தீர்த்த பின் தகுதியான அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த வாரத்தில் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது” என்றார்.