திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.. எனவே எப்போது இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று பெண்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது.. மேலும் இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.. இதனிடையே பெண்களுக்கு ரூ.1000 உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.. ஆனால் தேர்தல் வாக்குறுதியின் படி, மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுவது உறுதி என்று முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்தார்.. மேலும் சமீபத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின், வரும் மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.. அந்த நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு உரிமைத்தொகை ரூ.1000 எப்போது வழங்கப்படும் என்பதை அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார்..

அதன்படி நாளை தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த நிலையில் இந்த உதவித்தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, PHH என்ற வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கும், PHHAAY என்ற அந்தியோதயா அன்னயோஜனா ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 கிடைக்கும் என்று கூறப்படுகிறது.. எனினும் NPHH -S, NPHH – NS ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த மாதம் 1000 ரூபாய் தொகை கிடைக்காது என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
ஆனால் அதே நேரத்தில், வருமான வரி செலுத்துவோர் வீட்டில் உள்ள பெண்கள், அரசு வேலையில் இருப்பவர்கள், சொந்த வீடு வைத்திருப்போர் ஆகியோரின் குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு ரூ.1000 கிடைக்காது என்று கூறப்படுகிறது. தகுதியான பெண்களுக்கு மட்டுமே மாதம் ரூ.1000 பணம் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிகிறது.. இந்த திட்டத்தை பெற ரேஷன் அட்டையில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை என்றும் கூறப்படுகிறது..
சில மாற்றங்களுடன் இந்த திட்டம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது.. இத்திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு 25,800 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.. இந்த திட்டம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..