தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு மூலம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 18ஆம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 2023 – 24ஆம் நடப்பு கல்வியாண்டில் 11ஆம் வகுப்பில் பயின்று வரும் மாணவ-மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, அரசு நடத்தும் திறனாய்வு தேர்வில் கலந்துகொண்டு முதல் 1,000 மதிப்பெண்களை பெறுபவர்களுக்கு (500 மாணவர்கள், 500 மாணவிகள்) ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் அவர்களின் இளங்கலை பட்டப்படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்படும்.
இதற்கான திறனாய்வு தேர்வு செப்டம்பர் 23ஆம் தேதி முதல் தாள் காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், இரண்டாம் தாள் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. 9 மற்றும் 10ஆம் வகுப்பு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். 18ஆம் தேதிக்குள் மாணவர்கள் www.dg.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, ரூ.50 தேர்வு கட்டணமாக சேர்த்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.