பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக வாக்குறுதி கொடுத்த ஆதாரத்தை தந்தால், அவர்களுக்கு 1 லட்சத்து 200 ரூபாய் வழங்கப்படும் என பாஜக போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் கருப்பு பணத்தை வெளிநாட்டில் இருந்து மீட்டால் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடலாம்.. அந்த அளவுக்கு வெளிநாட்டில் கருப்பு பணம் உள்ளது என்று கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால், அதனை திரித்து ஆட்சிக்கு வந்தவுடன் 15 லட்சம் ரூபாய் மோடி தருவதாக வாக்குறுதி அளித்ததாக திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக பாஜக-வினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி ரூ.15 லட்சம் அனைவரது வங்கி கணக்கிலும் போடுவதாக வாக்குறுதி கொடுத்தார் என்பதற்கான ஆதாரத்தை அளித்தால் 1 லட்சத்து 200 ரூபாய் பரிசு வழங்கப்படும் என பாஜக-வினர் போஸ்டர் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.