விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் நிதியுதவியை உயர்த்தும் திட்டம் இல்லை” என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு சாகுபடி நேரத்தில் உதவும் வகையில் பிரதமரின் விவசாய உதவித் தொகை திட்டத்தை ‘பிரதமர் கிசான் சம்மான் நிதி’ என்ற பெயரில் பா.ஜ., அரசு செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டொன்றுக்கு ரூ.6 ஆயிரத்தைய மத்திய அரசு வழங்கி வருகிறது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் என்று வழங்கப்படும் நிதியுதவியை 12,000 ரூபாய் ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, லோக்சபாவில், ரூ.6 ஆயிரத்தை ரூ.8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை உயர்த்தும் திட்டம் உள்ளதா? என எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா, விவசாயிகள் நிதியுதவி தொகையை ரூ.6 ஆயிரத்தில் இருந்து உயர்த்தும் திட்டம் எதுவும் அரசிடம் தற்போது பரிசீலனையில் இல்லை. இடைத்தரகர்கள் தலையீடு இன்றி, நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பணம் கிடைக்க வகை செய்யப்படும் வகையில், பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் உள்ளது. இதுவரை 15 தவணைகளாக 11 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 81 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.