காவல்துறையை இந்த அரசு தவறாக பயன்படுத்துவதாகவும், எடப்பாடி பழனிசாமியுடன் துணை நிற்போரின் வீடுகளில் சோதனை நடத்தப்படுவதாகவும் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ”எனது வீட்டில் ஏற்கனவே இரண்டு முறை சோதனையிட்டு ஒன்றும் கிடைக்கவில்லை. 3-வது முறையாக நடைபெற்ற இந்த சோதனையில் ரூ.7100 மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது. இது தவிர எனது அம்மாவின் சிறு நகைகளை லஞ்ச ஒழிப்புத்துறையினர் எடுத்துச் சென்றுள்ளனர். வேறு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதை அதிகாரிகளே எழுதி கொடுத்து விட்டு சென்றுள்ளனர்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “காவல்துறையை இந்த அரசு தவறாக பயன்படுத்துகிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக வரவுள்ள நிலையில், எங்களை பழி வாங்குவதற்காக முதலமைச்சர் முக.ஸ்டாலின் போலீசாரை ஏவி சோதனை நடத்துகிறார். மின் கட்டண உயர்வை திசை திருப்பவும் அண்மையில் கோவை, திருப்பூர் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு மக்களிடம் இருந்த வரவேற்பை பொறுத்துக் கொள்ள முடியாமலும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது”. இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல், அடையாறில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், “லஞ்ச ஒழிப்புத்துறையினர் என்னுடைய வீட்டில் இரண்டாவது முறையாக சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் வீட்டில் இருந்த இரண்டு கைபேசிகளை மட்டுமே எடுத்துச் சென்றுள்ளனர். முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை. என்னுடைய குடும்பத்தாரின் ஆதார் அட்டைகள், பள்ளி சான்றிதழ்கள் போன்றவற்றையே எடுத்து சென்றுள்ளனர். அவை முக்கியமான ஆவணங்களாக இருக்கலாம்.
எடப்பாடி பழனிசாமியுடன் துணை நிற்போரின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது. மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதியை மத்திய அரசே வழங்குகிறது. மருத்துவக் கல்லூரிக்கு தடையில்லா சான்றிதழ் மட்டுமே வழங்குகிறது. மருத்துவக் கல்லூரிக்கு தடையில்லா சான்றிதழ் கொடுத்ததற்காக என் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது என்றால், திமுக ஆட்சியில் கல்லூரி தொடங்க தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டதற்கும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்” என்றார்.