கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குப்பி பகுதியைச் சேர்ந்த நேத்ராவதி என்ற 17 வயது சிறுமி, சிராவில் உள்ள கல்லூரியில் பி.யூ.சி. படித்து வந்தார். இவரும், அதே கல்லூரியில் 3ஆம் ஆண்டு படிக்கும் குமார் (21) என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். ஆனால், இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள். இதனால், இவர்களின் காதலுக்கு பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. காதலை கைவிடும்படி நேத்ராவதியை பெற்றோர் கண்டித்தனர். ஆனாலும், இருவரும் தங்கள் காதலை வளர்த்து வந்தனர். தொடர்ந்து பெற்றோரிடம் இருந்து எதிர்ப்பு, மிரட்டல் வந்ததால் கடந்த 7ஆம் தேதி நேத்ராவதி வீட்டைவிட்டு வெளியேறி தனது காதலன் குமாருடன் சென்று திருமணம் செய்ய முடிவு செய்தார். அதன்படி, இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.
இதனால் இரு வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, குமார், நேத்ராவதியை அழைத்து வந்து 2 குடும்பத்தினரும் சமாதானம் பேசினர். எனினும், பெண்ணின் தந்தை பரசுராம் உள்ளிட்ட சிலர் காதலுக்கு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, தங்களது மகளுடனான காதலை கைவிடும்படி குமாரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் நடந்த மறுநாளே நேத்ராவதி விஷம் குடித்து தற்கொலை செய்து விட்டதாக பரசுராம், அவரது குடும்பத்தினர் கூறினார்கள். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் தனது மகள் தற்கொலை செய்து விட்டதாக கிராம மக்களை நம்ப வைத்தனர்.
மேலும், இந்த தகவல் பரவுவதற்கு முன்பே மாணவி நேத்ராவதியின் உடலை எரித்து விட்டனர். அதன் பின்னரே காதலி இறந்த தகவலை அறிந்து குமார் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். போலீசார் கிராம மக்களிடமும், பெண்ணின் வீட்டார், இளைஞரின் வீட்டாரிடமும் அடுத்தடுத்து விசாரணை நடத்தினர். இதில் பரசுராம் தான், அவரது மகளை கொலைச் செய்த திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. இதையடுத்து, பரசுராமிடம் மீண்டும் விசாரணை நடத்திய போது தனது மகளை கொலைச் செய்ததை ஒப்புக் கொண்டார். தனது மகன் மற்றும் உறவினர்கள் சேர்ந்து ஆணவக்கொலை செய்து விட்டதாக கூறினார்.
அதைத் தொடர்ந்து, பரசுராம், அவரது மகன் சிவராஜ், பரசுராமின் சகோதரர் துக்காரம் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். நேத்ராவதியின் கழுத்தை நெரித்து கொலை செய்த பின்னர், தற்கொலை செய்துக் கொண்டார் என்பது போல் மாற்றுவதற்காக அவரது வாயில் விஷம் ஊற்றியதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். பின்னர் அவசர அவசரமாக உடலை எரித்ததாகவும் கூறியுள்ளனர். இந்த ஆணவக்கொலை சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.