கோயில் திருவிழாக்களின் போது, விபத்துகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடைமுறைகளை விழா ஏற்பாட்டாளர்கள் வகுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம் அமாவாசை அன்று விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில், பக்தர்களுக்காக தகரத்தினாலான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. மின் விளக்குகளுக்காக போடப்பட்டிருந்த வயர்கள் அறுந்து தகரத்தின் மீது விழுந்ததில் வரிசையில் நின்றுக்கொண்டிருந்த பக்தர்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், இதில் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விழாவுக்கு ஒளி, ஒலி ஏற்பாடு செய்திருந்த ராஜா மற்றும் அவரது ஊழியர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், ராஜாவுக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனையும் 30 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த 2016ம் ஆண்டு தீர்ப்பளித்தது. மேலும் இந்தவழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பை ரத்து செய்து தன்னை விடுதலை செய்யக்கோரி ராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, மின் திருட்டு குற்றச்சாட்டில் கோயில் நிர்வாகிகளும் அறங்காவலர்களும் பொறுப்பாகி இருக்கவேண்டிய நிலையில், குற்றப்பத்திரிகையில் அவர்கள் சேர்க்கப்படாமல், சவுண்ட் சர்வீஸ் நபர்களை மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், கோயில் திருவிழாக்களின் போது, விபத்துகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடைமுறைகளை விழா ஏற்பாட்டாளர்கள் வகுக்க வேண்டுமென அறிவுறுத்திய நீதிபதி, இந்த வழக்கை பொறுத்தவரை மரணம் விளைவிக்கும் நோக்கத்துடன் ராஜா செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு நிரூபணம் ஆகவில்லை எனவும் கவன குறைவாக மரணம் ஏற்படுத்தியதாகத்தான் கூறமுடியும் என்று கூறி ராஜாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து ஏற்கனவே சிறையில் இருந்த 119 நாட்கள் சிறைத்தண்டனையே போதுமானது என்று தீர்ப்பளித்தார். மேலும் 30 ஆயிரம் அபராதத்தை உறுதி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.