வெங்காயம் இல்லாமல் சமையலில் ருசியே இல்லை. ஆனால், இன்றைக்கு வெங்காயத்தின் விலையே உச்சத்தில் இருக்கிறது. கிலோ ரூ.100 கொடுத்து வாங்கி அதை வழக்கமான அளவில் பயன்படுத்த முடியாமல் இல்லத்தரசிகள் திண்டாடுகின்றனர். காய்கறி மார்க்கெட்டிற்கு போய் வெங்காயத்தை வெறுமனே பார்த்து ஆசையாய் தடவி பார்த்து விட்டு மட்டுமே வரவேண்டியிருக்கிறது. சமையலில் வெங்காயத்தை அதிகம் பயன்படுத்தினால் சமூகம் பெரிய இடம் போல என்று மீம்ஸ் போடுகிறார்கள்.
சமையலில் வெங்காயம் பயன்படுத்தப்படுவது இன்றைய நேற்றைய சமாச்சாரமில்லை. கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வெங்காயத்தை பயிரிட்டு சமைத்து சாப்பிட்டு வந்திருக்கின்றனர். காரணம் அதன் நன்மைகள்தான். வெங்காயம் உடலுக்கு தேவையான சத்துக்களை தருவதோடு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. பல நாடுகளில் வெங்காயத்தை மருந்தாக பயன்படுத்துகின்றனர். பாட்டி வைத்தியத்தில் வெங்காயத்திற்கு தனி இடம் உண்டு.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அது படிப்படியாக குறைந்து தப்போது ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், சத்தமில்லாமல் உயர்ந்திருக்கிறது சின்ன வெங்காயம். திருச்சி வெங்காய மார்க்கெட்டில் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
திருச்சி காய்கறி சந்தைக்கு தினசரியும் 300 டன் வெங்காயம் வந்து கொண்டிருந்தது. ஆனால், தற்போது சின்ன வெங்காயம் 100 டன் மட்டுமே வரத்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். திருச்சி மட்டுமல்லாது தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை உயர்வு காரணமாக சின்ன வெங்காயத்தை வாங்க முடியாமல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திரா, கர்நாடகாவில் மழை தீவிரமடைந்துள்ளது. பண்டிகை காலங்களில் வெங்காயத்தின் தேவை அதிகரிக்கும் என்பதால் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.