அமெரிக்காவில் உள்ள ஒரு நகரம் செப்டம்பர் 3 ஆம் தேதியை சனாதன தர்ம தினமாக அறிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, சனாதன தர்மம் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், உதயநிதிக்கு எதிராக கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இவரது பேச்சு தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இப்படி இந்தியாவில் சனாதன சர்ச்சை பரபரப்பாக சென்று கொண்டிருக்கும்போது அமெரிக்காவில் உள்ள ஒரு நகரம் செப்டம்பர் 3 ஆம் தேதியை சனாதன தர்ம தினமாக அறிவித்துள்ளது வியப்படைய செய்கிறது.
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில்லி நகர மேயர் செப்டம்பர் 3ஆம் தேதியை சனாதன தர்ம தினமாக அறிவித்துள்ளார். லூயிஸ்வில்லியில் உள்ள கென்டக்கி இந்து கோவிலில் மகா கும்பா அபிஷேகம் கொண்டாட்டத்தின் போது மேயர் கிரேக் கிரீன்பெர்க் சார்பாக துணை மேயர் பார்பரா செக்ஸ்டன் ஸ்மித் அதிகாரப்பூர்வ பிரகடனத்தை வாசித்தார். இந்நிகழ்ச்சியில் ஆன்மிக தலைவர்கள் சித்தானந்த சரஸ்வதி, பர்மார்த் நிகேதன் தலைவர் ரிஷிகேஷ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பகவதி சரஸ்வதி, துணை நிலை ஆளுநர் ஜாக்குலின் கோல்மன், துணை முதல்வர் கெய்ஷா டோர்சி மற்றும் பல ஆன்மிக தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.