கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க சசிகலா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓ.பன்னீர்செல்வம், தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். இதைத் தொடர்ந்து அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க அவரது ஆதரவாளர்கள் வீட்டிற்கு சென்ற வண்ணம் உள்ளனர். இதற்கிடையே, அதிமுக அலுவலகம் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பால் மிகுந்த அப்செட்டில் இருந்து வருகிறார் ஓபிஎஸ்.

இதேபோல் வங்கிகள் விவகாரமும் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக பாதிக்கச் செய்துள்ளது. இந்தச் சூழலில் அடுத்தக் கட்டமாக என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளில் அவரது ஆதரவாளர்கள் இறங்கியுள்ளனர். இதற்கு மத்தியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள ஓ.பன்னீர்செல்வத்தை, சசிகலா நேரில் சந்தித்து நலம் விசாரிக்கும் திட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம்-சசிகலா சந்திப்பு விரைவில் நடைபெறக் கூடும் என்றும் அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்புக்கு ஓபிஎஸ்ஸின் சகோதரர் ஓ.ராஜா தான், ஏற்பாடுகளை செய்து வருவதாகவும், இந்த சந்திப்பு நிகழ வேண்டும் என்பதில் அவர் மிகுந்த ஆர்வத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் சந்தித்து பேசிக் கொள்ளட்டும் இதனால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மிக உறுதியாக இருக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், சசிகலாவையும், ஓ.பன்னீர்செல்வத்தை ஒரு பொருட்டாகவே எடப்பாடி தரப்பு கருதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.