பெங்களூரு சிறையில் சொகுசு வசதிகளை சட்டவிரோதமாக பெற்றது தொடர்பான வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி இருவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 4 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தனர். ஆனால், பெங்களூரு சிறையில் சட்டவிரோதமாக பல்வேறு சொகுசு வசதிகளை இருவரும் அனுபவித்து வந்ததாக புகார் எழுந்தது.
சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து வெளியே சசிகலா, இளவரசி ஷாப்பிங் சென்ற வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆனால், பெங்களூரு லோக் ஆயுக்தா நீதிமன்ற விசாரணைக்கு சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. இவ்வழக்கில் சசிகலா தரப்பு முதல் வாய்தாவுக்கு மட்டும் ஆஜராகி இருந்தார். மீதமுள்ள எந்த ஒரு விசாரணைக்கும் சசிகலாவும், இளவரசியும் ஆஜராகவில்லை. இதனையடுத்து பெங்களூரு லோக் ஆயுக்தா நீதிமன்றம் சசிகலா, இளவரசி இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கில் சசிகலா, இளவரசிக்கு ஜாமீன் வழங்க கையெழுத்திட்ட நபர்களுக்கும் லோக் ஆயுக்தா நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.