fbpx

முதன்முறையாக மதுக் கடையை திறக்கும் சவுதி!… `விஷன் 2030′ திட்டத்தின்கீழ் அடுத்த முயற்சி!… நிபந்தனைகளும் அறிவிப்பு!

மது விற்பனைக்குத் தடை செய்யப்பட்டுள்ள சவுதி அரேபியாவில், முதன்முறையாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான அறிவிப்பை இளவரசர் முகமது பின் சல்மான் வெளியிட்டுள்ளார்.

இஸ்லாமிய நாடுகளில் மது அருந்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் சவுதி அரேபியாவும் ஒன்று. இஸ்லாமிய ஆட்சி முறை நடைமுறையில் இருக்கும் சவுதி அரேபியாவை, அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான அரசு, ஆட்சி செய்து வருகிறது. இவர் தன் ஆட்சியில், எண்ணெய் வளத்தைக் கடந்து, பொருளாதாரத்தை மேம்படுத்த `விஷன் 2030′ எனப்படும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அதன் ஒருபகுதியாக சவுதி அரேபியாவைச் சுற்றுலா மற்றும் வணிகத்தளமாக மாற்றும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இஸ்லாத்தில் மது அருந்துவது தடைசெய்யப்பட்டிருப்பதால், சவுதி அரேபியாவில் மது விற்பனைக்குத் தடை செய்யப்பட்டிருக்கிறது. சவுதி அரேபியாவில் மது அருந்துபவர்களுக்குத் தண்டனையாகக் கசையடிகள், நாடு கடத்தல், அபராதம், சிறைத் தண்டனையும், வெளிநாட்டவர் என்றால், உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றுதல் போன்ற கடுமையான சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தற்போது, சவுதி அரேபியாவைச் சுற்றுலா மற்றும் வணிக தளமாக மாற்றும் நோக்கத்துக்கான நடவடிக்கையாக, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான அரசு, சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் முதல் மதுபானக் கடையைத் திறக்கத் திட்டமிட்டிருக்கிறது. இந்த மதுக்கடையில், முஸ்லிம் அல்லாத வெளிநாட்டுத் தூதர்களுக்கு மது விற்பனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த புதிய திட்டத்தின் மூலம், வெளிநாட்டுத் தூதர்கள் மதுவைப் பெறவேண்டுமென்றால், இதற்கென உருவாக்கப்பட்டிருக்கும் வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து, அனுமதிக் குறியீட்டைப் பெற்று, மொபைல் செயலி மூலம் பதிவுசெய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் சவுதி அரேபியாவுக்கு வரும் வெளிநாட்டினருக்கு மது விற்பனை இருக்குமா என்பது குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான ஆட்சியில், மதச்சார்பற்ற சுற்றுலா, இசை நிகழ்ச்சிகள் மற்றும் திரையரங்குகளுக்கு அனுமதி, பெண்களை வாகனம் ஓட்ட அனுமதித்தல், தளவாட மையங்களை உருவாக்குதல், தற்போது மது விற்பனை உள்ளிட்டவை `விஷன் 2030′ என்ற திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

இன்று தைப்பூசம்.. கேட்டதை கொடுத்தருள முருகனுக்கு எப்படி விரதம் இருந்து வழிபடலாம்.!?

Thu Jan 25 , 2024
பொதுவாக தை மாதம் என்பது தெய்வ பக்தி நிறைந்த மாதமாக கருதப்படுகிறது. பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் கூடிவரும் நாளையே தைப்பூசமாக கொண்டாடுகிறோம். தைப்பூசம் தினத்தில்தான் இந்த உலகம் தோன்றியதாகவும், இந்நாளை முருகனுக்கு உகந்த நாளாகவும் நம் முன்னோர்கள் கருதி வருகின்றனர். இந்த தைப்பூச திருநாளில் முருகனிடம் வேண்டி விரதம் இருந்து வந்தால் கேட்டது கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. மேலும் குரு பகவானுக்கு உரிய நாளான வியாழக்கிழமை அன்று வந்துள்ள […]

You May Like