விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் காலனி பால்வாடி தெருவை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், 14 வயதான செல்லப்பன் என்ற மகனும் உள்ளனர். ஆனத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறுவன் செலப்பன் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று சிறுவனுக்கு பிறந்தநாள் என்பதால், பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சிறுவன் தனது தாயிடம் பானி பூரி வாங்க பணம் வேண்டும் என்று கேட்டுள்ளான். அப்போது சிறுவனின் தாய், குடும்ப கஷ்டத்தை கூறி பணம் தர மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த செல்லப்பன், தனது தாயிடம் வாக்கு வாதம் செய்துள்ளான். தனது தாய் மீண்டு பணம் தர மறுத்ததால், விரக்தியில் சிறுவன் வீட்டில் புடவையால் தூக்கில் தொங்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவனது தாய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் செல்லப்பனை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக இறந்தான். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.