1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவத் தேர்வு கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. 6, 8, 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும், 7, 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலிலும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 15ஆம் தேதி தொடங்கிய, அரையாண்டுத் தேர்வு இன்றுடன் நிறைவு பெற இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டு இருந்த ஆண்டு அட்டவணையில் டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு, டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, அரையாண்டு தேர்வு எழுதி முடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்களுக்கு அசைமென்ட்டுகளை மட்டும் வழங்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் 1 முதல் 5ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் மற்ற மாணவர்களுக்கு ஏற்கனவே கூறியது போல் ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.