கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்புக்கு ஜூன் 1ஆம் தேதியும், 1 முதல் 5ஆம் வகுப்புக்கு ஜூன் 5ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட இருந்தன. இதற்கிடையே, கோடை வெயில் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டுமென அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், பள்ளிகள் திறப்பு மற்றும் அதற்கான முன் தயாரிப்பு பணிகள் தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இணையவழியில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில், திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்களது மாவட்டத்தில் உள்ள நிலைமை குறித்து நேற்று என்னிடம் காணொளி காட்சியின் வாயிலாக விவரங்களை தெரிவித்தனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து 2 தேதிகளை முதலமைச்சரிடம் வழங்கியுள்ளோம். அவர் எதனை தேர்வு செய்கிறாரோ அந்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறியிருந்தேன். அதன்படி, மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை நீட்டிக்கப்படுகிறது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.