சென்னை அயனாவரத்தில் அதிகாலையில் உதவி ஆய்வாளர் சங்கர் வாகனச் சோதனையில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் பைக்கில் வந்த 3 நபர்களை வழிமறித்து சங்கர் விசாரித்தார். அப்போது, அந்த 3 நபர்களும் இரும்பி கம்பியால் உதவி ஆய்வாளர் சங்கரை தலையில் தாக்கிவிட்டு தப்பியோடிய முயற்சித்தனர். இதில், அவர் காயமடைந்தார். இதனையடுத்து, 2 பேரை போலீசார் விரட்டி பிடித்தனர். ஆனால், பிரபல ரவுடி பெண்டு சூர்யா மட்டும் தப்பித்து தலைமறைவானான். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் தனது அக்கா வீட்டில் பதுங்கியிருந்த சூர்யாவை அயனாவரம் பெண் உதவி ஆய்வாளர் மீனா தலைமையிலான 4 பேர் கொண்ட தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்.
இதையடுத்து, அயனாவரம் நியூ ஆவடி சாலையில் அமைந்துள்ள ஆர்டிஓ அலுவலகம் அருகே வரும்போது திடீரென பெண்டு சூர்யா, கத்தியால் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடினான். இந்த சம்பவத்தில் காவலர்கள் இருவர் படுகாயமடைந்தனர். தப்பியோடிய ரவுடி பெண்டு சூர்யாவை அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் மீனா முழங்காலில் சுட்டுப் பிடித்தார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரவுடி பெண்டு சூர்யாவுக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.