பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் 12,105 பகுதி நேர ஆசிரியர்களுக்கு தலா ரூ.2,500 ஊதியம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், தோட்டக்கலை உள்ளிட்ட 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் ரூ. 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர். இதையடுத்து, 2014ஆம் ஆண்டு ரூ. 2 ஆயிரம் ஊதியம் உயர்த்தப்பட்டது. கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது ரூ.2,300 ஊதியம் உயர்த்தப்பட்டதால், ரூ.10 ஆயிரம் ஊதியம் பெற்று வந்தனர்.
இதையடுத்து ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் அண்மையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் 12,105 பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2,500 ரூபாய் ஊதியம் உயர்த்தி வழங்கி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.10,000-இருந்து ரூ.12,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.