தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் பங்குனி மாதத்தில் அம்மன் கோவில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதனால், அந்தந்த மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் திருவிழாக்களை மகிழ்ச்சியாக கொண்டாட உள்ளூர் விடுமுறைகளை அறிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தற்போது தென்காசி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருவிழா ஏப்ரல் 5ஆம் தேதியான இன்று, வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளதால், தென்காசி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தற்போது 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து கொண்டிருப்பதால், தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது என அறிவித்துள்ளார். மற்ற மாணவர்களுக்கான முக்கிய தேர்வுகளும் மற்றும் பொதுத்தேர்வுகளும் எவ்வித இடையூறும் இல்லாமல் வழக்கம் போல நடைபெறும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.