ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகை மற்றும் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் வரவுள்ளதால், பொங்கல் பரிசு தொகை அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, தமிழ்நாடு அரசு தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கும் தென் மாவட்டங்களுக்கும் வெள்ள நிவாரண நிதியும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொங்கலுக்கு இன்னும் வாரங்களே இருக்கும் நிலையில், பொங்கல் பரிசு தொகை மற்றும் பரிசுத்தொகுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதை அடுத்து பொங்கல் பரிசு தொகை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தலைமைச் செயலக வட்டாரங்கள் இது குறித்து கூறியபோது, இந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகை 2,000 கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. எனவே, பொங்கல் பரிசு தொகை 2,000, மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் என 3,000 கிடைக்கும் என்றும் வெள்ளம் பாதித்த பகுதிக்கு கூடுதலாக 6,000 என மொத்தம் 9000 கிடைக்கும் என்று கூறப்படுகிறது.