திருவள்ளூர் மாவட்ட முன்னாள் எம்எல்ஏவும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான கும்மிடிப்பூண்டி கி.வேணு உடல் நலக்குறைவால் காலமானார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கும்மிடிப்பூண்டி கே. வேணு. இவர் திமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளராகவும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து வந்துள்ளார். 1989, 1996 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்று, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1975ம் ஆண்டு மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு மறைந்த திமுக முன்னாள் தலைவரும், முதல்வருமான கலைஞர் கருணாநிதியுடன் ஓராண்டு சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் இவருக்கு கடந்த 2021ல் ‘கலைஞர் விருது’ வழங்கப்பட்டது.
இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் கும்மிடிபூண்டி கி.வேணு மறைந்தார் என்ற துயர செய்தியை கேட்டு துடிதுடித்து போனேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். மிசா நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு சிறை சென்ற போராளி கி.வேணு என புகழாரம் சூட்டிய ஸ்டாலின் அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், தொகுதி மக்களுக்கும் ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.