அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 18-வது முறையாக நீட்டித்துள்ள சென்னை நீதிமன்றம், பிப்ரவரி 7ஆம் தேதி வரை அவரது நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 230 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி, தற்போது துறையில்லாத அமைச்சராக நீடிக்கிறார்.
இதற்கிடையே, ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 2-வது முறையாக செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, சென்னை புழல் சிறையில் இருந்தபடியே காணொலி வழியாக செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அவரின் காவலை பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்படுவது இது 18-வது முறையாகும்.