மேற்காசிய நாடான லெபனானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அந்த நாட்டின் மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். லெபனான் பவுண்ட் மதிப்பு வீழ்ச்சி அடைந்து, பணவீக்கம் உயர்ந்தது.
இதையடுத்து 2019-ஆம் வருடம் முதல் வாடிக்கையாளர்கள் வங்கிகளில் இருந்து டாலர்களை திரும்பப்பெறுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் முடக்கப்பட்ட சேமிப்புகளை மீண்டும் எடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வாடிக்கையாளர்கள் வங்கிகளை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது. வங்கி ஊழியர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவானது.
குறிப்பாக ஒரு பெண் நேற்று முன்தினம் போலி துப்பாக்கியுடன் அங்குள்ள வங்கியில் குடும்ப மருத்துவ கட்டணத்தை செலுத்த பணம் கேட்டது, பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதுகாப்பு இல்லாததால் வங்கிகளை காலவரையின்றி மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து லெபனான் வங்கிகள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும்வரையில் வங்கிகள் மூடப்பட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அங்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.