ஆஸ்திரேலியாவில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரி்க்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவை அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் சஸ்பெண்ட் செய்து இலங்கை கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை நடந்து வருகிறது. உலகக் கோப்பையில் பங்கேற்கச் சென்ற இலங்கை அணியில் தனுஷ்கா குணதிலாகவும் சென்றிருந்தார். அங்கு ஒரு பெண்ணுடன் டேட்டிங்கில் ஈடுபட்டிருந்த குணதிலகா அவருடன் பழகியுள்ளார். அந்த பெண்ணை கடந்த வாரம் ஒரு ஹோட்டலில் சந்தித்துபோது அவருடன் பாலியல் உறவு வைத்துள்ளார். அந்த பெண் தனது அனுமதியில்லாமல் பாலியல் உறவை வைத்து பலாத்காரம் செய்துவிட்டதாக சிட்னி போலீசில் புகார் அளித்தார். குணதிலகா மீது பாலியல் வன்கொடுமை புகார் எழுந்ததை அடுத்து, அவரை சிட்னி போலீசார் நேற்று கைது செய்தனர்.

இலங்கை அணியும், இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து, டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள, இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகாவை அனைத்து விதமான கிரி்க்கெட்டில் இருந்தும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யவும், எதிர்வரும் எந்த தொடரிலும் தேர்வு செய்ய பரிசீலிக்க வேண்டாம் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா மீதான குற்றச்சாட்டு குறித்து தேவையான நடவடிக்கை எடுத்து, இலங்கை வாரியம் விசாரணை நடத்தும். ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் குணதிலகா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இலங்கை வாரியமும் தண்டனை வழங்கும். இதுபோன்ற அவமதிப்புக்குரிய ஒழுக்கக்கேடான செயல்களை இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. ஆஸ்திரேலிய காவல்துறையும், அரசும் நியாயமான விசாரணை நடத்தத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் இலங்கை கிரிக்கெட் வாரியம் வழங்கும்” எனத் தெரிவித்துள்ளது.

இலங்கை வீரர் குணதிலகாவுக்கு கையில் விலங்கு மாட்டப்பட்டு, சிட்னி நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலானது. சிட்னியில் உள்ள டவுனிங் உள்ளூர் நீதிமன்றத்துக்கு குணதிலகா அழைத்து வரப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்படும் என்று அவரின் வழக்கறிஞர் ஆனந்தா அமரநாத் தெரிவித்தார். குணதிலகா ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி ராபர்ட் வில்லியம்ஸ், ஒத்திவைத்தார். அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், “ஜாமீன் வழங்கினால், சாட்சிகளையும், ஆதாரங்களையும் அழிக்கக்கூடும்” எனத் தெரிவித்தார்.