நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்டு 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ஷவர்மாவால் உயிரிழப்பு ஏற்படுவது இது முதன்முறையல்ல. கடந்த ஆண்டு கேரளாவில் கூட இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. இளைஞர்கள் விரும்பி சாப்பிடும் ஷவர்மாவில் அப்படி என்ன தான் இருக்கிறது? அது ஏன் ஆபத்தானது? என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஷவர்மா என்பது மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த உணவாகும். 19ஆம் நூற்றாண்டில் இது துருக்கியில் அறிமுகமானது. சிக்கன் ஷவர்மா, பீஃப் ஷவர்மா, வெஜ் ஷவர்மா என பல வகைகளில் இது கிடைக்கிறது. 1997ஆம் ஆண்டு இந்தியாவில் ஷவர்மா அறிமுகமானது. சவுதி அரேபியாவில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்த ஹைதரபாத்தை சேர்ந்த நபர் ஒருவர், தனது உணவகத்தில் ஷவர்மாவை அறிமுகம் செய்தார். தற்போது உலகம் முழுவதும் பிரபலமான உணவாக இது மாறி உள்ளது.
கோழிக்கறி அல்லது ஏதேனும் ஒரு வேகவைத்த இறைச்சி தான் ஷவர்மாவின் முக்கிய பொருள். அந்த இறைச்சியை நறுக்கி நன்றாக சுடப்பட்ட ரொட்டியில் வைத்து, அதில் முட்டைக்கோஸ், சாஸ், மயோனைஸ் போன்றவற்றை கூடுதல் சுவைக்காக சேர்க்கின்றனர். கேரளாவில் ஷவர்மாவால் உயிரிழப்பு ஏற்பட்ட போது ஷவர்மா மாதிரிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் ஷிகெல்லா (Shigella), சால்மோனெல்லா (Salmonella) பாக்டீரியாக்கள் இருந்ததை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும், இறப்புக்கும் இந்த பாக்டீரியாக்கள் தான் காரணம் என தெரியவந்தது.
நன்றாக வேக வைக்கப்படாத அல்லது பழைய இறைச்சி, எளிதில் கெட்டுப்போகக் கூடிய மயோனைஸ், காலாவதியான சாஸ் ஆகியவையே இந்த பாக்டீரியாக்கள் உருவாக காரணமாக இருக்கலாம். இறைச்சியை மீண்டும் மீண்டும் சூடுப்படுத்துவது, ஷவர்மா தயாரிக்கும் சுகாதாரமற்ற சூழல் ஆகியவையும் இதற்கு காரணமாக இருக்கலாம். இந்த ஷிகெல்லா பாக்டீரியா காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா வயிற்றுக்குள் செல்லும் போது சிறுகுடலில் தொற்றை ஏற்படுத்தி பெருங்குடலுக்கும் பரவுகிறது.
இதனால் வயிற்றுபோக்குடன், காய்ச்சல், வாந்தி, குமட்டல், வயிற்று வலி, வியர்வை, தலைவலி, செரிமான பிரச்சனைகள் ஏற்படும். இதனால் நரம்புப் பிரச்சனை, சிறுநீரக செயலிழப்பு கூட ஏற்படலாம். கர்ப்பிணிகள், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானது. இதனால் ஆண்டுக்கு 18 கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர். 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்பதை தரவுகள் காட்டுகிறது.
அசுத்தமான உணவு மற்றும் தண்ணீர், கழிப்பிடம் மூலம் இந்த பாக்டீரியா பரவுகிறது. இந்த பாக்டீரியா உள்ள பொருட்களை தொடும் போதோ அல்லது பாக்டீரியா உள்ள உணவுகளை சாப்பிடும் போதோ இது பரவும். மேலும், ஷிகெல்லாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் மூலமாகவும் இது பரவலாம்.
எப்படி தடுப்பது?
அதிக வெப்பநிலையில் வைத்து உணவு சமைக்க வேண்டும். உதாரணமாக குறைந்தது 75 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சிக்கனை சமைக்க வேண்டும். சமையலுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர், உணவு பொருட்கள் தரமானதாகவும், சுத்தமானதாகவும் இருக்க வேண்டும்.