தமிழ்நாட்டையே உலுக்கியெடுத்திருக்கிறது பதின் வயது மாணவி மீராவின் மரணம். சினிமா பிரபலத்தின் மகள் என்பதால், இந்த மரணத்திற்கு இத்தனை முக்கியத்துவமா என்று கேட்டால், தற்கொலைக்கு எதிராக நாம் பேசவும், செயல்படவும் அவசர, அவசிய தேவை ஏற்பட்டிருப்பதை பெற்றோர்களும், ஆசிரியர்களும், அரசும் உணர வேண்டிய தருணம் இது என்பதை மீராவின் மரணம் நம் முகத்தில் அறைந்திருக்கிறது.
இந்நிலையில், மீராவுக்கு மன அழுத்தமே கிடையாது என அவரது ஆசிரியை கூறியிருக்கிறார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனஅழுத்தம் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என சொல்லப்படும் நிலையில், அவருக்கு மன அழுத்தமே கிடையாது என அவரது ஆசிரியை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ”மீரா மிகவும் தைரியமான குழந்தை. யாருக்காவது கஷ்டம் என்று சொன்னால் அவள்தான் முதலில் ஓடிப்போய் நிற்பாள். எல்லா போட்டிகளிலும் பங்கேற்பாள். கேப்டன் அவள். ஏன் அப்படி செய்தால் என்று தெரியவில்லை. வெள்ளிக்கிழமை ஸ்கூலில் தேர்வு எழுதிவிட்டு மகிழ்ச்சியாகதான் சென்றாள். மன அழுத்தம் எல்லாம் கிடையாது.
ஒரு குழந்தையைப் பற்றி நாமே எதுவும் சொல்லிவிடக் கூடாது இல்லையா? யாராவது மன அழுத்ததில் இருந்தால் கூட அவர்களை வெளியே கொண்டு வருவாள். ஜாலியான குழந்தை அவள். பேண்ட் ஷர்ட் எல்லாம் போட்டுக் கொண்டு பையன் மாதிரியேதான் இருப்பாள். அவளது இந்த முடிவு வருத்தமளிக்கிறது” என்று கூறியுள்ளார்.