மதுரையில் தொடர் மழை காரணமாக இரண்டு அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மதுரை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, நேற்று நள்ளிரவு பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்நிலையில், மதுரை காக்காதோப்பு பகுதியில் உள்ள பழமையான இரண்டு அடுக்கு கட்டிடத்தின் மீது நேற்று நள்ளிரவில் பலத்த இடி விழுந்ததால் கட்டிடம் முழுவதும் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது கட்டிடத்தில் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் கட்டிடம் இடைந்து விழுந்ததால், அங்கிருந்த மின்சார வயர்கள் சேதம் அடைந்து, அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து, தகவல் அறிந்து வந்த வருவாய் துறையினர் இடிபாடுகளை அகற்றிய நிலையில், மின்வாரியத்தினர் மின் இணைப்புகளை சீரமைத்தனர். தொடர் மழையால் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம், மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.