மனைவி மற்றும் பெற்ற குழந்தைகளை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார் (40). கூலித் தொழிலாளியான இவருக்கு தவமணி (38) என்ற மனைவியும், வித்யதாரணி (13), அருள்பிரகாஷ் (5), அருள்குமாரி (10) ஆகிய மூன்று குழந்தைகளும் இருந்தனர். இந்நிலையில், இன்று காலை அவரது வீட்டிற்கு உறவினர்கள் சென்றிருந்தபோது, அங்கு தவமணி மற்றும் 3 குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ரத்த காயங்களுடன் வெட்டுப்பட்ட நிலையில், குழந்தைகளான அருள்பிரகாஷ், வித்யதாரணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், அசோக்குமாரின் மனைவி தவமணி மற்றும் 10 வயது குழந்தை அருள்குமாரியை ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆத்தூர் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையிலான கெங்கவல்லி போலீசார், வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கூலித் தொழிலாளி அசோக்குமாரை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.