நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும், மகாராஷ்டிராவிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனாவில் 90 சதவீதம் இந்த மாநிலங்களிலேயே பதிவாகி வருகிறது. இந்தியாவில் பதிவாகும் கொரோனா எண்ணிக்கைகளில் கேரளா மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. சுமார் 95 சதவீதம் கொரோனா தொற்று எண்ணிக்கை கேரளாவில் பதிவாகி வருகிறது.
இதற்கிடையே, நோய் தொற்று வேகமாக பரவக்கூடிய ஜே.என்.1 என்ற கொரோனா இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் 4 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 4 பேருக்கு இந்த தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இணை நோய்க்காக சிகிச்சை பெற வந்த போது அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ஜே.என்.1 வகை தொற்று இருப்பது தெரியவந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்வைக் கவனத்துடன் கண்காணித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.