திரைப்பட நடிகையும், தயாரிப்பாளரும், இயக்குனருமான ஜெயதேவி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 65.
இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான வேலு பிரபாகரனின் முன்னாள் மனைவியான இவர், முதலில் நடனக்கலைஞராகப் பணியாற்றி வந்தார். பின்னர், தமிழில் இதயமலர், சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வாழ நினைத்தால் வாழலாம், சரியான ஜோடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மற்றவை நேரில், வா இந்த பக்கம், நன்றி மீண்டும் வருக, ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது ஆகிய படங்களை தயாரித்திருக்கிறார். இதில், வா இந்த பக்கம் படத்தில் பி.சி.ஸ்ரீராமை உதவி ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினார். நலம் நலமறிய ஆவல், விலாங்கு மீன், விலங்கு, பாசம் ஒரு வேஷம், பவர் ஆஃப் உமன் ஆகிய படங்களை எழுதி இயக்கியுள்ளார்.
திராவிடர் கழகத்துடன் இணைந்து கடவுள், புரட்சிக்காரன் ஆகிய படங்களை வேலு பிரபாகரன் இயக்கத்தில் தயாரித்துள்ளார் ஜெயதேவி. பல ஆண்டுகளுக்கு முன்பு வேலு பிரபாகரனை காதலித்து திருமணம் செய்த ஜெயதேவி, கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு குழந்தை கிடையாது.
தனது அண்ணன் ராமகிருஷ்ணனின் மகனும், இயக்குனருமான முத்துக்குமாரை வளர்த்து வந்த ஜெயதேவி, இதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சென்னை போரூரில் உள்ள வீட்டில் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.